நித்திய கரும விதி- 3
- வள்ளலார் அருள்மாளிகை

- Oct 9, 2020
- 2 min read
சிறப்பு விதி
1. நித்தியம் சூரியோதயமாக 5 நாழிகைக்கு19 முன்னே நித்திரை நீங்கி எழுந்திருத்தல்.
2. எழுந்தவுடன் விபூதி தரித்துச் சற்றுநேரம் செவ்வையாக உட்கார்ந்து, கடவுளை ஊன்றி நினைத்து எழுதல்.
3. அங்ஙனம் எழுந்து, சிறிதுந் தாமதியாமல், மௌனமாகச் சிறிது தூரம் நடந்து, எவ்விடத்தில் மலசலவுபாதி நேரிடுகிறதோ, அவ்விடத்தில் அப்பொழுதே ஒன்றுஞ் சேஷ்டையில்லாமல் விரைவில்லாமல் இருந்து அறவிடுதல்.
4. பொற்றலைக்கையாந்தகரை, கரிசலாங்கண்ணி - இவைகளில் ஒன்று கொண்டு உள்ளே சிறிது சாரம் போகவும் கபநீர் பித்தநீர் வெளியாகவும் தந்தசுத்தி செய்தல்.
5. பின்பு திருநீறு தரித்துக்கொண்டு, ஏகாந்தமாக ஓரிடம் பற்றியிருந்து, சூரியனுதயமாகிற வரையில் கடவுளைத் தியானஞ் செய்துகொண்டிருத்தல்.
6. உதயந் தொடங்கிச் சுமார் சாம பரியந்தம் தக்க முயற்சியோடு பழகுதல்.
7. காலையில் உண்ணாமல் சுமார் பதினைந்து நாழிகைக்கு உண்ணுதல்.
8. காலையில் சூரியோதயமானவுடன் தூதுளை, பொன்னாங்கண்ணி, வில்வம், சீந்தில், பொற்றலைக் கையாந்தகரை, புளியாரை, வல்லாரை, நன்னாரி, கடுக்காய், மிளகு, அறுகம்வேர் - இவைகளில் யாதாயினும் ஒன்றைப் பசும்பாலிற் சுத்தி செய்து சூரணமாக்கிக் கொண்டு சர்க்கரையிற் கலந்தாவது அல்லது சூரணமாகவாவது பசும்பாலில் அனுபானித்தாவது சிறிது சிறிதாக உண்ணுதல்.
9. சுமார் 15 நாழிகைக்கு உண்ணத் தொடங்கும்போது, முன்புசித்த போசன முழுதுஞ் ஜீரணித்ததை நன்றா யூன்றி யறிந்து, பின்பு ஜீரணித்த அக்கணமே விருப்பால் ஏறாமலும் வெறுப்பால் குறையாமலும் தராசு முனைபோல் அளவறிந்து, அந்த அளவின்படி, அதிக விரைவும் அதிக தாமதமு மில்லாதபடி சமமாகப் புசித்தல்.
10. புசிப்பில் பச்சரிசிச் சாதம், பசும்பால், பசுநெய், முருங்கை, கத்தரி, முள்ளி, தூதுளை முதலிய இளங்காய். பொன்னாங்கண்ணி, தூதுளை முதலிய இளங்கீரை - இவைகளில் மிளகு ஒருபங்கு, சீரகம் காலே அரைக்காற் பங்கு, வெந்தயம் காற்பங்கு, புளி வீசம் பங்கு, உப்பு வீசம் பங்கு, மிளகாய் வீசம் பங்கு சேர்க்கப்பட்ட கறியமுது குழம்பு ரசம் முதலானவைகளைக்கொண்டு, பெருங்காயம் வெங்காயம் வெள்ளைப்பூண்டு முதலானவைகளைத் தள்ளிப் புசித்தல்.
11. புசித்தபின்பு, மத்தியானந் தொடங்கி 25 நாழிகை பரியந்தம் சத்துவமான விவகாரங்களை மெல்லென இருந்தபடி நடத்தல், பிறர்க்கு விசேஷங் கேளாவகை படித்தல், மெல்லெனப் பேசல் - இவையன்றி நல்ல நினைப்போடிருந்தல்.
12. காலை, மத்தியானம், சாயங்காலம் - இப்பொழுதுகளிலும் மத்தியிலும் நித்திரை செய்யாதிருத்தல்.
13. மத்தியான போஜனம் செய்கிறபொழுது, அடிக்கடி தாகநீர் குடியாமல், போஜனஞ் செய்தபின்பு, ஒரு தரமாக இளஞ்சூடுள்ள வெந்நீரைக் கிரமமாகத் தாகத்துக்குக் கொண்டு, குளிர்ந்த ஜலம் சிறிதுங் கொள்ளாது தள்ளுதல்.
14. மத்தியானத்தில் சுமார் 5 நாழிகை பரியந்தஞ் செவ்வையாக ஓரிடத்திலிருந்து, மனத்தை ஒருவழிப்படுத்தித் தெய்வ சிந்தனை யோடிருத்தல்.
15. காலைப்புணர்ச்சி, பகற்புணர்ச்சி, அந்திப்புணர்ச்சி, இரவு முன்பங்குப்புணர்ச்சி, காலைப்போஜனம், அந்திப்போஜனம் முதலானவை யில்லாதிருத்தல்.
16. சாயங்காலத்திலும் 5 நாழிகை யாதொரு முயற்சியும் இல்லாமல், ஓரிடத்திலசையாதிருந்து தியானித்தல்.
17. இரவில் 10 நாழிகைக்குள் மத்தியான போஜனத்துக்கு அரைத்தரமாகப் புசித்தல்.
18. அதற்குமேல் இராத்திரி 15 நாழிகை பரியந்தம் மனத்தையடக்கித் தியானித்திருத்தல்.
19. 15 நாழிகை தொட்டு இருபத்திரண்டரை நாழிகை20பரியந்தம் மெல்லெனத் தூங்கல்.
20. படுத்து விழிக்கிற பரியந்தம் இடக்கை கீழிருக்கச் செய்தல்.
21. ஆகாரம் அரை, நித்திரை அரைக்கால், மைதுனம் வீசம், பயம் பூச்சியம் ஆகப் பெறுதல்.
திருச்சிற்றம்பலம்

Comments